கணையாழீ,தீபச்செல்வன்,அ.மார்க்ஸ் மறுக்கப்படும் …

கணையாழீ,தீபச்செல்வன்,அ.மார்க்ஸ் மறுக்கப்படும் அரசியல்-கருத்துக்கள்.

முள்ளிவாய்க்காலில் சரணடைந்த பிரபாகரன் குடும்பம் பலவாறாகச் சிதைக்கப்பட்டும்,பிரபாகரன் சித்திரவதைக்குட்பட்டும்,மண்டை பிளவுண்டும் செத்துப் போயினர்.இந்தத் துன்பியல் நிகழ்வு 2009 மே 16-17-18 ஆம் தேதிகளில் நடைபெற்றிருக்க முடியும்.

மேற்சொன்ன தேதிதிகள், புலித் தலைவர் பிரபாகரன் குடும்பத்தின் உண்மையான இறுதி முடிவின் தேதிகளாகும்.

இதைக் குறித்துப் புலிகளே இதுவரை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவுமில்லை-எற்கவுமில்லை.தலைவர்கள் உயிரோடிருப்பதாகச் சொல்லி இலங்கை-இந்திய,சீனக் கூட்டுக் கொலைகளைச் சட்டரீதியாகச் செல்லாக்காசாக்கினர், இன்றுவரையும்!

இது குறித்துப் பல ஆவணத்தோடு புலம்பெயர் தளத்தில் செய்திகளும்-ஆவணப்படங்களையும் தேடித் தேடிப் போட்டவர்கள் எல்லோரும் புலிப் பினாமிகளால் தூற்றப்பட்டனர்.புலி அநுதாபிகள் அன்றுஞ்சரி,இன்றுஞ்சரி நியாயமாகக் கவனத்தை „இது குறித்து“ச் செய்யவில்லை.இயக்க நலன்,“தமிழீழம்“ என்ற அகக்கனவுகள் அவர்கள்தம் கண்களைக் கட்டிப்போட்டது.

இந்தச் சதிகுறித்த தமிழரங்கக் கட்டுரை-ஆவணப்படங்கள் அடங்கியவொரு சுட்டியானது பல பத்தாயிரம் தடவைகள் பார்க்கப்பட்டிருக்கிறது.என்றபோதும், அதையெல்லாம் மறைப்பு அரசியலுக்குள் முடக்கியவர்கள் இப்போது பாலச்சந்திரனது படங்களைப்பார்த்துவிட்டு அரசியல் செய்யும் புள்ளி என்னவாகவிருக்கும்?

நான்காண்டுகளாகவிதைக் கண்டுகொள்ளாது, இலங்கைப் பாசிச அரசியலைக் குறித்து இயங்க மறுத்தவர்கள்-புலிகளது சதி அரசியலால் தமிழ்பேசும் மக்களது விடுதலை காட்டிக்கொடுக்கப்பட்டதைப் பார்க்க மறுத்தவர்கள். இப்போது, பாலச் சந்திரனை முதன்மைப்படுத்தி, அவிழ்க்கும் அரசியல் ஒரு செல்லாக் காசாகும்.இதைத்தாண்டிச் சில வற்றைக் குறித்துக் கவனத்தைக் குவித்தால்,இவையெல்லாம் ஒரு கொசிப்பு அரசியலாகவே மாறிவிட்டதென்றவொரு புள்ளியைக் குவித்துக்கொள்ள முடியும்.

இந்தக் குறையுடைய விட்டேந்தி அரசியலது தெரிவில்,“தமிழ்பேசும் மக்களை முள்ளி வாய்க்காலில் இனப்படுகொலை செய்த சிங்களவரசுக்கும் அதற்குத் துணைபோன தென்னாசியப் பிராந்திய வல்லரசுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை“ யென நாம் குறிப்பிட்ட சிலரைத் தொடர்ந்து சிலுவைசுமக்கக் கூப்பிடுகிறோம்.

இத்தகைய இனவழிப்பை இலங்கையில் செய்யத்தக்க பொருளாதாரவுறவுகள் வளர்ந்து வருவதையும்,அதன் வாயிலாக மாறி வருஞ் சூழலைக் கவனத்தில் எடுத்து, மக்களை ஜனநாயக ரீதியாக இயங்க அனுமதித்துப் புலிகளது இயக்கவாத அராஜகத்தையும் அது சார்ந்த இருப்பு அரசியலையும் கைவிட்டு அரசியல் ரீதியாகப் பிரச்சனையை அணுகுவதற்குப் பல தளத்திலான செயற்பாட்டுக்காக மாற்றுச் சக்திகளை இயங்க அனுமதிக்கும்படி நாம் 2007 இன் ஆரம்பத்திலேயே எழுதத் தொடங்கிவிட்டோம். இந்தச் சந்தர்ப்பத்தில் புலிக்குக் காவடி தூக்கியவர்கள், அந்த அமைப்பின் பாசிசத்துக்குமுன் மண்டியிட்டுக் கிடந்து,மௌனித்து அதைப் புரட்சிகரமானவொரு சக்தியாகவும்,விடுதலை அமைப்பாகவும் படம் காட்டியவர்கள்,முள்ளி வாய்க்காலின் கடைசி நிமிடம்வரை „புலிகள் வெல்வார்கள்“ என மார் தட்டினார்கள்.இது,இனவழிப்புக்கான ஒத்தூதலுக்குள் வரமுடியாதென எவருரைப்பார்?

சிங்கள அரசு,உலக ஏகாதிபத்தியங்களை ஆதரித்தவர்கள் மட்டுமல்ல புலிகளையும் கண்ணை மூடி ஆதரித்தவர்களுமேதாம் தமிழினவழிப்புக்கு உடந்தையானவர்கள்.நெஞ்சில் நேர்மையுள்ளவர்கள் இது குறித்துப் பேச வரட்டும்.

அதே போல்,இன்றும் இத்தகைய புலி அநுதாபிகளால் ஆதரிக்கப்பட்டுத் தொகுப்புகள் போடப்படும் „கவிஞர்-கட்டுரையாளர்-கதாசிரியர்-செய்தியாளர்“ என்ற அடை மொழிக்குள் தன்னை நிறுவிக்கொண்டு, அப்பாவி மக்களைப் புலிப்பாசிசமும்,இலங்கை அரச பாசிசமும் இணைந்து யுத்தத்துள் கொன்று போட்டதை வைத்துப் புனைந்து, அதையே தமிழகவூடகங்களுக்குக் கச்சாப்பொருளாகவிற்கும் தீபச் செல்வனுக்குப் பார்பன ஏடுகளே இன்று பரிசுகள்-கேடயங்கள் வழங்கும்போது அதையே மௌனித்து வரவேற்கும் நியாயவாதிகளுக்குப் பார்பன ஏடுகளது தந்திரம் புரியாத என்ன?

பார்ப்பன நிறுவன ஏடான கணையாழியின் அரசியல் தெரியாத என்ன?

சும்மா விசும்புக்கு வேட்டையாடுவதில்,முள்ளி வாய்க்கால் படுகொலையைக் கண்டிக்கவில்லையென்பவர்கள் முதலில் 2009 இல் வன்னியுத்த  அழிவுகள் நடக்கும்போது யாழ்ப்பாணத்தில் வாளாதிருந்த யாழ்ப்பாணத்தார் நல்லூர்க் கந்தனுக்குத் தேரிழுத்து மகிழ்ந்த கபோதித்தனமான அரசியலை விளங்க முற்படுங்கோ!

நாமே,நமது மக்களைப்பலியெடுக்கப் புலிக்கு வக்காலத்துவேண்டி அழிவுக்குக் காரணமாக நின்றோம்.மாறிவரும் சூழலையெல்லாம் தானைத் தலைவரது கவட்டுக்குள் திணித்துவிட்டுத் „தலைவர் காலத்தில் தமிழீழம் மலரும்“என்ற மமதைக்கு என்ன பெயர்?

போதாதற்கு,தமிழ்நாட்டரசியலுள் இணைக்கப்பட்ட இந்திய வெளியுறவுக்கொள்கைக்கு எந்த மார்க்சும் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாது!அது பலதரப்பட்ட அதிகார அடுக்குகளது நலனோடு சம்பந்தப்பட்டது.அது மட்டுமன்றி இந்தியப் பிராந்தியத்தின் இறைமைக்குட்பட்ட முற்றுமுழுதான அரசியல் சட்டரீதியான செல்வாக்குக்குட்பட்ட இலங்கைக்குள் இந்தியாவென்பது எதையும் செய்யும்-எப்படியும் நடக்கும்.அதைத் தட்டிக்கேட்கும் உரிமையென்பதைக்கூட மக்களுக்கு வழங்காது புலிகள் இந்தியாவின் அரசியலில் எத்தனை மோசடியான நிகழ்வுகளைச் செய்தார்கள்?அதை நொண்டிக் காரணமாக வைத்துத் தமிழ்பேசும் இனத்தையே கருவறுத்த இந்திய ஆளும் வர்க்கத்தின் பிராந்திய ஆதிக்கத் திமிரை வெறுமனவே அ.மார்க்சுக்குள் திணித்துவிட்டு ஒற்றை வரி இலக்கணமெழுதுவது மீளவும், நம்மை அழிப்புக்கிடவே செய்யும்.

[கணையாழி விருது நிகழ்வு:

பேராசிரியர் பஞ்சாங்கம், தசரா, நீதிபதி சந்துரு, ஜெயகாந்தன், கனிமொழி]

முதலில் தீபச் செல்வனை வைத்துப் பிழைக்கும் அரசியலையும்,அதன்வழி நம்மை மொட்டையடிக்க முனையும் இந்திய லொபிகளையும் மார்ச்சையும்தாண்டி நமக்குள் தேடுங்கோ.அப்போது,மார்சின் பாத்திரமும்,தீபச் செல்வன்,மற்றும் இன்னபிறப் பேராளர்களதும் பாத்திரமும் தெரிந்துவிடப்போகிறது.இதைவிட்டு ஒரு தனிநபர்மீது குவிக்கும் அரசியலானது உண்மையான குற்றவாளிகளைக் காப்பதில் முடிந்துபோகிறது.

இதைத்தாம் புலிகளது தமிழீழப்போராட்டத்துள் நாம் செய்துகொண்டோம்.

தமிழ்பேசும் மக்களது உண்மையான குற்றவாளிகளே புலிகள் வடிவத்துள் மக்களைச் சிதைத்துப் பிழைத்துக்கொண்டவின்றைய பெரு வர்த்தகர்களாக மக்களது பணத்தில் மீளவும் தேசியவிடுதலை வியாபாரஞ் செய்யும் பினாமிப் புலிகளென்பதையெவர் பேச முனைகிறார்?

இன்றுவரை,புலிகளது பெருந் தலைவர்களெல்லாம் இலங்கை-இந்திய-சீன நலன்களுக்கிசைவான அரசியலோடு நகரும்போது அந்தப் புலிகளது கலை இலக்கிய கர்த்தாக்களே இந்தியப் பார்ப்பனிய ஊடாகங்களுக்குச் சோரம்போய் மக்களின் அவலங்களை வித்துப் பிழைக்கும்போது அ.மார்ச்சிடமும்,மார்க்சியர்களிடமும் இந்திய வெளியுறவுக்கொள்கைக்கு விளக்கம் கேட்கும் அரசியல் அறம் புலி அநுதாபிகளுக்குண்டா? இந்தியப் போலி மார்க்சியர்களை வைத்து முழுமொத்த மார்க்சியப் போக்கையும் சிதைக்க முனையும் திரு விளையாடல் ஆருக்கான அரசியலை முதன்மைப்படுத்தும்?

„ஏன்-எதற்கு“ என்ற கேள்வியையே புலிக்கு முன் சமாதி கட்டிவைத்துவிட்டுப் புலிகளது எல்லா நியாயங்களையும் தமிழீழத்துக்காகச் சரியென்ற அரசியலது அறுவடைதாம் முள்ளி வாய்க்கால்.

புலி அழிவின் இறுதி நிமிடம்வரை புலிகளோடு மக்கள் அழிவதையும்,அதே மக்களை இயக்க இருப்புக்காகப் புலிகள் தம்மோடழிக்க வியூகமமைத்ததையும் தட்டிக் கேட்க துப்பற்ற அரசியல் அறத்தின்மீது ஆணி அடித்தபோதெல்லாம் நம்மைத் துரோகிகளாக்கிய இந்த அரசியலே இப்போதும் புலிகளது மிச்ச சொச்சங்களைக் கள்ள மௌனம் சாதித்துக் காத்துக்கொண்டு,மார்க்சியர்கள்மீது பாய்வது வர்க்க அரசியலின் வர்க்க நலனைக் காவுவதென்பதற்கப்பால் இது பிழையான தெரிவுகளை உணர்ச்சி வழி நிகழ்த்தும் கொசிப்பு அரசியலாகும் என்பதைத்தாம் சொல்வதென்று புரிக.

„உலகத் தமிழர் பேரவை“ என்றும்,“நாடுகடந்த தமிழீழ அரசு“ வென்றும்,இன்னபிற முக மூடிகளது தார்ப்பாரில் மையங்கொள்ளும் மேற்குலகத்தின் நலன்சார் அரசியலுக்கும்,அதையே தென்னாசியப் பிராந்திய நலனைக் காவும் மேற்சொன்ன பிழைப்பு வாதப் புலமைக்கும் நடுவே எமது மக்களது தலைவிதி வியாபாரமாக்கப்படுகிறது.

மக்களது அவலத்தை வைத்து இலக்கிய வியாபாரம் முதல்,முதலீடு செய்யும் நிதி ஆதாரம்வரை நகரும் இந்தக் குருதிக்கறைபடிந்த அரசியலைக் குறித்துக் கேள்வி கேட்பதும்,நியாயமாகப் புலிகளதும்,ஏகாதிபத்தியங்களதும் அரசியலையும்,இந்திய-சீனா லொபிகளையும் தோலுரித்து வைக்கும் அரசியலை முன் வைக்கத் திரணியின்றி நாம் விட்டேந்தித் தனமான அரசியலைக் குழுவாத நெருக்கடிக்கொப்பத் தகவைக்கின்றோம்.

அந்நிய நலனில் எந்தெந்தக் குழுக்கள் தம்மைத் தகவமைத்தனவென்பதற்கு இயக்கவாத மாயைக்கு-தமிழீழக் கனவுக்கு வெளியிற்றாம் பதிலுண்டு.

ப.வி.ஸ்ரீரங்கன்

24.02.2013